ஞாயிறு, 2 மார்ச், 2014

உயர் பதவியில் குறைந்த நாட்கள் இருந்தாலும் தகுந்த பென்ஷன் உண்டு


            உயர் பதவியில் குறைந்த நாட்கள் இருந்தாலும், அதற்குரிய பென்ஷனை தான் வழங்க வேண்டும்' என, ராணுவ தீர்ப்பாயம் உத்தரவிட்டது செகந்தராபாத், பிருந்தாவன் காலனியை சேர்ந்த கிருஷ்ணாராவ், சென்னையிலுள்ள ராணுவ தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு.. 

           கடந்த, 1964ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தேன். 1985, ஜூன் மாதம், ஜூனியர் வாரன்ட் ஆபீசராக, பதவி உயர்வு பெற்றேன். அதே ஆண்டு, ஆக., 31ல், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன். விமானப் படையில், 21 ஆண்டு பணியாற்றியுள்ளேன். என் புதிய பதவி சம்பள அடிப்படையில் தான், எனக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்தேன்.
 
           ஆனால், உயர் பதவி பெறுபவர்கள், குறைந்தது, இரண்டு ஆண்டுகள் வரை, பணியில் இருந்தால் தான், உயர் பதவி பென்ஷன் வழங்கப்படும். அதற்கு, குறைந்த நாட்கள் பணியாற்றினால், ஏற்கனவே பணியில் இருந்த, பதவியின் சம்பள அடிப்படையில் தான், பென்ஷன் வழங்கப்படும் என, ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, எனக்கு உயர்பதவி அடிப் படையிலான, பென்ஷன் வழங்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை, ராணுவ தீர்ப்பாய தலைவர், நீதிபதி பெரிய கருப்பையா அடங்கிய அமர்வு விசாரித்து, மனுதாரருக்கு ஜூனியர் வாரன்ட் ஆபீசர் நிலையில், பென்ஷன் வழங்க வேண்டும் என்று, இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: