ஞாயிறு, 2 மார்ச், 2014

66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்தில் "ரிசல்ட்' : தேர்வு துறை இயக்குனர் தகவல்


         "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கும். மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவு வெளியாகும்'' என, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறினார்.

தேர்வு தொடர்பாக, அவர் வெளியிட்ட, முக்கிய புள்ளி விவரங்கள்:
 
          தமிழ் வழியில், தேர்வை எழுதும், 5,45,771 மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.விடைத்தாள் முதல் பக்கம், புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும். இதில், மாணவர் புகைப்படம், பதிவு எண், தேர்வுப் பாடம், தேதி உள்ளிட்ட, அனைத்து விவரங்களும் இருக்கும். மாணவர், வெறும், கையெழுத்து மட்டும் போட்டால் போதும்.
 
வினாத்தாள் கட்டு
ஒரு அறையில், 20 மாணவர் வீதம், தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அறையிலும், இரு மாணவரிடம், கையெழுத்து பெற்றபின், அவர்கள் முன்னிலையில், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும்.
வினாத்தாளை, படித்துப் பார்க்க, 10 நிமிடமும், விடைத்தாள் முதல் பக்கத்தில் உள்ள விவரங்களை சரிபார்க்க, 5 நிமிடமும் வழங்கப்படும். எனவே, விடை எழுதுவதற்கான நேரம், 10:15க்கு துவங்கி, பகல், 1:15க்கு 
முடிவடையும்.

ரத்து செய்யப்படும் 
 
        தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்கள் நடந்தால், அதற்கு, பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் தேர்வு மையம், ரத்து செய்யப்படும் தமிழ் வழியுடன், ஆங்கில வழியிலும், கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.விடைத்தாள் கட்டுகளை, அஞ்சல் துறை மூலம், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பாமல், கார்கள் மூலமாக, பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
தடையற்ற மின்சாரம் 
 
          தேர்வு மையங்களில், தடையற்ற மின்சாரம் வழங்க, மின்சார வாரியம் மூலம், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனினும், ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ளவும், பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு 
உள்ளது.
 
          "பிட்' வைத்திருத்தல், "பிட்'டை பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம், முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்பாடுகள், கடுமையான குற்றங்களாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு, குற்றத்தின் அடிப்படையில், உரிய தண்டனை
வழங்கப்படும்.
 
         கடந்த தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, 397 மாணவர்கள், தண்டனை பெற்றுள்ளனர். எனவே, மாணவர்கள், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு, எதிர்காலத்தை, பாழாக்கிக்கொள்ளக் கூடாது. விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்ளில் நடக்கும். தேர்வு முடிவுகள், மே, முதல் வாரத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: